என் ஜாதி, என் மதம், என் இனம், என் நாடு என்று மட்டுமே சிந்திப்பது குறுகிய மனப்பான்மை (நான் கூறவில்லை வசுதைவ குடும்பகம் என்னும் ஸ்லோகம் அப்படி கூறுகிறது) இதோ இன்னொருவர் *உலக உயிர்களெல்லாம் பொதுவெனக் கண்டு இரங்குக* என்று கூறினார். வேறு யாராக இருக்கும் அருட்பிரகாச வள்ளலார் தான். அது மட்டுமா கூறினார் *இறைவன் ஒருவனே* என்றும் *சாதி சமய வேறுபாடு அற்ற நிலை* என்றும் கூறிச்சென்றார். *மந்திரமாய்ப் பதமாகி, வண்ண மாகி வளர்க லையாய்த் தத்துவமாய்ப் புவன மாகி சந்திரனாய், இந்திரனாய், இரவி யாகித் தானவராய், வானவராய், தயங்கா நின்ற தந்திரமாய், இவையொன்றும் அல்ல வாகித் தானாகித் தனதாகித் *தான்நான்* காட்டா அந்தரமாய் அப்பாலாய், அதற்கப் பாலாய் அப்பாலுக்கப் பாலாய் அமர்ந்த தேவே* மேலே கூறிய கவியில் இறைவன் எங்கும் எதிலும் ஜீவித்திருக்கின்றான் என்கிறார். மேலும் அன்பே தான் கடவுள் என்றார். *அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படும்பரம்பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புருவாம் பர சிவமே!* இறைவனை எங்கே காண முடியும் என்பதற்க்கு வள்ளலார் அளிக்கும் விளக்கத்தில் இருந்து இவரும் திருமூலரைப் போலவே சிந்தித்திருக்கிறார் என்பது புலனாகிறது. *எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெரு மான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன் சிந்தை மிக விழைந்த தாலோ* அணைத்து உயிர்களையும் தன் உயிர்போல் எண்ணுவது மட்டுமல்லாது, அன்பின் மிக்கியத்துவத்தை உணர்த்த இறைவனிடம் வேண்டுவது கூட, தான் அணைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்கிறார். *அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்! ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்!* சமரச சன்மார்க்க நெறியில், ஆண் பெண் வேறுபாடு காணாது, சாதி - சமயம் - மதம் - கோத்திரம் - சாத்திரம் - உயர்ந்தோர் - தாழ்ந்தோர் என்ற பேதங்கள் இல்லாமல் *அனைவரும் சமம்* என்கிற கோட்பாடும், கடவுளை வணங்கும் பொழுது தனக்கு மட்டுமே அல்லாது இந்த *உலகமே* நன்றாக வாழும்படி வேண்டுதல் சுத்த சன்மார்க்க நெறியாகும்.
You are visitor no:
Saturday, April 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment